மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே, கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும் பாம்பும், பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்திஎந் நாளும் பொருந்துகவே.
யோகத்தாலும், தவத்தாலும் பூமியில் உள்ள மனிதரை காட்டிலும் மேம்பட்ட முனிவர்களும்,
வானுலகில் உள்ள தேவர்களும் வணங்கும் மெல்லிய செவ்வண்ணமுடைய தேவியே
நீண்ட சடாபாரமும் அதில் கங்கையையும் குளிந்த நிலவினையும்
கண்டத்தில் பாம்பை அணிந்தவருமாகிய சிவ பெருமானும் நீயும்
என் அறிவிடத்தே எந்நாளும் இணைந்து இருப்பீர்களாக
