அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 14. தலைமை பெற

வந்திப்பவர் உன்னை, வானவர் தானவர் ஆனவர்கள், சிந்திப்பவர், நற்றிசைமுகர் நாரணர், சிந்தையுள்ளே பந்திப்பவர், அழியாப் பரமானந்தர், பாரில் உன்னைச் சந்திப்பவர்க்கெளிதாம் எம்பிராட்டி, நின் தண்ணளியே. தேவர்களும் அசுரர்களும் ஆகிய இரு இனத்தினரும் அபிராமி தாயே நின்னை வழிபடுகின்றனர். பிரம்ம தேவரும் திருமாலும் உன்னை தியானம் செய்பவர் தம் உள்ளத்தின் உள்ளே அன்பினால் பூட்டி வைப்பவர் ஆனந்த உருவினரான சிவபெருமான் இத்தனை இருந்தாலும் பூவுலகில் உன்னை தரிசிப்பவர்க்கு உன் திருவருள் எளிதாக கிட்டுகிறது.